குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - கவிஞர் வைரமுத்து பேச்சு

இந்திய அரசியலமைப்பின் அடிப்படையையே பொடிப்பொடியாக்குகின்ற குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - கவிஞர் வைரமுத்து பேச்சு
Published on

சென்னை,

அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் மறைந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் க.ப.அறவாணனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக இணை வேந்தர் இரா.பெருமாள்சாமி தலைமை தாங்கினார்.

முக்கிய அழைப்பாளராக பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, க.ப.அறவாணன் உருவாக்கிய அறிஞர் போற்றுதும் என்ற புத்ததத்தையும், க.அ.அறிவாளன் பதிப்பித்த அறவாணர் போற்றுதும் என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கார்ல் மார்க்ஸ் இறந்தபோது ஏங்கல்ஸ் இப்படி எழுதினான். இவன் நூல்களின் அளவைப் பார்த்தால் இவன் காலமெல்லாம் எழுதிக்கொண்டே இருந்தான் என்று தோன்றுகிறது. அந்த நூல்களின் அடிக்குறிப்புகளைப் பார்த்தால் இவன் காலமெல்லாம் படித்துக்கொண்டே இருந்தான் என்று தோன்றுகிறது.

மறைந்த துணைவேந்தர் க.ப.அறவாணன் அப்படித்தான். காலமெல்லாம் எழுதிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருந்தார். அவர் எழுதிய புத்தகங்கள் இறந்த காலத்தில் முளைத்தவை; ஆனால், நிகழ்காலத்திற்கும் சேர்த்தே பழுத்தவை.

போராளி இனமான தமிழச்சாதி எந்த நூற்றாண்டில் போர்க்குணத்தை இழந்தது என்பதைச் சான்றுகாட்டி எழுதியிருக்கிறார் அறிஞர் அறவாணன். நிலமும், பண்பாடும், பன்னாட்டுப் படையெடுப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பிறகுதான் தமிழர்கள் போர்க்குணத்தை இழந்திருக்கிறார்கள். போராட்டம் என்பது உயிரின் இருப்பு.

மனித வாழ்வை முன்னெடுத்தோடும் சக்கரமே போராட்டம்தான். கல்லில் இருந்து தீயைக் கடைந்தெடுத்தது ஒரு போராட்டம்; மரத்தில் இருந்து சக்கரத்தை வடித்தெடுத்தது ஒரு போராட்டம்; வேட்டைக் கலாசாரத்தில் இருந்து விவசாயக் கலாசாரத்திற்கு தாவியது ஒரு போராட்டம்.

மனிதகுலத்தின் அறிவுப்போராட்டமும், உரிமைப் போராட்டமும் ஓய்வதே இல்லை. இன்று மாணவர்களின் போராட்டத்தையும் அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். ஒடுக்குமுறை போராட்டத்தைத் தீர்மானிக்கிறது; அடக்குமுறை வன்முறையைத் தீர்மானிக்கிறது. வன்முறைக்கு எதிரியாக இருப்பவர்கள்கூட போராட்டத்திற்கு எதிரிகளாக இருக்க முடியாது.

இந்திய அரசியலமைப்பின் அடிப்படையையே பொடிப்பொடியாக்குகிற குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். போராட்டத்தை நாடு விரும்பவில்லை; ஆனால் நாடு போராடுவதை விரும்பிவிடக்கூடாது. நாடு காக்கப்பட வேண்டும்; நல்லதே நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com