

திருப்பத்தூர்,
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வள்ளிப்பட்டு ஊராட்சியில், வாக்குச்சாவடி எண் 193-ல் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
தி.மு.க. வேட்பாளருடன் சையது பாருக், தன்னுடன் வந்த ஆதரவாளர்களுடன் ஆய்வு மேற்கொள்ள வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைய முயன்றார். இதற்கு அ.தி.மு.க. ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, உள்ளே செல்லக்கூடாது எனத் தடுத்தனர். அதற்கு தி.மு.க.வினர், “அதை அதிகாரிகள் சொல்லட்டும்” எனக் கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் தீவிரமடைந்து கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காயமடைந்தவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.