தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

திருவாலங்காடு ஒன்றியத்தில் தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
Published on

திருவாலங்காடு ஒன்றியம் குப்பம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 45). இவர் கண் தெரியாத மாற்றுத் திறனாளி ஆவார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ரோஷினி என்ற மகளும், நவீன் குமார் என்ற மகனும் உள்ளனர். இதில் மகள் ரோஷினி (வயது 14) கடம்பத்தூர் ஒன்றியம் விடையூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

காலாண்டு விடுமுறை காரணமாக மாணவி ரோஷினி வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில தினங்களாக மாணவி படிப்பில் ஆர்வம் செலுத்தாமல் விளையாட்டுத்தனமாக இருந்ததை தாய் ராஜேஸ்வரி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரோஷினி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் மாணவியின் அம்மா, தம்பி இருவரும் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மாணவி ரோஷினி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தாய் ராஜேஸ்வரி அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com