

சென்னை,
நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே 5-ஆம் தேதி நடைபெறவிருந்த 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம், தமிழகத்தில் செயல்படும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் தேர்வுகள் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில், தமிழகத்தில் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறித்து பள்ளிகள் தரப்பில் மாணவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். தற்போது நடைபெற்று வரும் செய்முறைத் தேர்வுகள் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும். செய்முறைத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை 24-ஆம் தேதிக்குள் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை, தேர்வு நடைபெறுவதற்கு 15 நாள்களுக்கு முன்பே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.