சக மாணவருடன் குளிக்க சென்றபோது கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவர் மாயம்

சக மாணவருடன் குளிக்க சென்றபோது கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவர் மாயமானார்.
சக மாணவருடன் குளிக்க சென்றபோது கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவர் மாயம்
Published on

ஆவடியை அடுத்த மோரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டிஸ் குமார். இவருடைய மகன் தீட்சிதன் (வயது 13). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தனது பக்கத்து வீட்டில் வசிப்பவரும், தன்னுடன் ஒரே வகுப்பில் படித்து வருபவருமான சுனில்குமார் (13) என்பவருடன் நேற்று காலை சைக்கிளில் வெளியே சென்றார்.

பின்னர் மாணவர்கள் இருவரும் கிருஷ்ணா கால்வாயில் குளித்தனர். அப்போது தீட்சிதன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுனில்குமார் இதுபற்றி தீட்சிதனின் பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த அவர்கள், சம்பவ இடத்துக்கு சென்று கால்வாய் அருகே பல இடங்களில் தேடியும் தீட்சிதனை காணவில்லை. இதுபற்றி கதவல் அறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் ஆவடி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மோரை அருகே கிருஷ்ணா கால்வாய் பகுதியில் மாலை வரை மாணவரை பல இடங்களில் தேடினர். நீரில் மூழ்கி அடித்துச்செல்லப்பட்டாரா? என கால்வாயில் நீண்ட தூரம் தேடியும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக ஆவடி டேங்க்பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகின்றனர். இருள் சூழ்ந்து விட்டதால் தீயணைப்பு படை வீரர்கள் மாணவரை தேடும் பணியை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் மாணவரை தேடும் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com