அரசு கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது

கரூர் மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது
அரசு கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது
Published on

முதலாமாண்டு வகுப்பு தாடக்கம்

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது. அந்த வகையில் கரூர் மாவட்டத்திலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்தனர்.

இதில், பள்ளிப்படிப்பை முடித்து ஆர்வத்துடன் கல்லூரி படிப்பில் காலடி எடுத்து வைத்த கரூர் அரசு கலைக்கல்லூரி முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் பயிலும் 2, 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் நெல்லிக்காய் கொடுத்து வரவேற்றனர்.

புத்தாக்க பயிற்சி

இதனையொட்டி கல்லூரி கலையரங்கத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் தலைமை தாங்கி, கல்லூரியில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கல்லூரி விதிமுறைகள், மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், ஒழுக்க நெறிகள், கல்வி விரிவாக்க அமைப்புகள் மற்றும் நூலக பயன்பாடு குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

போக்குவரத்து விதிகள்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராமு கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து விதிகள் ஆகிய குறித்து உரையாற்றினார்.

இந்த புத்தாக்க பயிற்சி காலையில் கலைப்பிரிவு மாணவ, மாணவிகளுக்கும், மதியம் அறிவியல் பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். '

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com