

சிவகங்கை,
அரசு பள்ளி வகுப்பறையில் பிளஸ்-2 மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த நிரஞ்சான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 45). கொத்தனார். இவருடைய மகன் சஞ்சய் பிரசாத் (17). இவர் சிவகங்கையை அடுத்த மல்லல் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர்நல அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
நேற்று காலை சஞ்சய் பிரசாத் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். வகுப்பறையில் நுழைந்தபோது திடீரென 2 மாணவர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியால் சஞ்சய் பிரசாத்தை மார்பு மற்றும் முதுகில் குத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவரது அலறல் கேட்டு ஆசிரியர்கள், மற்ற மாணவர்கள் ஓடிவந்தனர். உடனே அந்த 2 மாணவர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
சிகிச்சைக்காக சஞ்சய் பிரசாத்தை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அறிந்த மானாமதுரை சிப்காட் போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து சஞ்சய் பிரசாத்தின் தந்தை ராஜாங்கம் கூறியதாவது:-
இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து சஞ்சய் பிரசாத்தின் தந்தை ராஜாங்கம் கூறியதாவது:-
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளியில் எனது மகனுக்கும், சில மாணவர்க ளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் எனது மகன் ஒரு மாணவரை தாக்கியதாக தலைமை ஆசிரியர் கூறினார். இதை தொடர்ந்து நான் ஒரு வாரம் கழித்து, கடந்த திங்கட்கிழமைதான் எனது மகனை பள்ளிக்கு அனுப்பினேன். அவனை நானே காலையில் பள்ளியில் கொண்டுசென்று விட்டுவிட்டு மாலையில் அழைத்துச்சென்றேன். அதன்படி சம்பவத்தன்று காலையிலும் பள்ளியில் விட்டுவிட்டு நான் வேலைக்கு சென்றுவிட்டேன். சிறிது நேரத்தில் பள்ளி காவலாளி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகனை பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் கத்தியால் குத்திவிட்டதாக கூறினார். பள்ளியில் இருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதால் அலறி அடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று எனது மகனை பார்த்தேன். இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.