

சென்னை,
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா நடப்பு உலக சாம்பியனான ரஷ்யாவின் ஜாவுர் உகுவேவை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் 4-7 என்ற புள்ளி கணக்கில் அவர் தோல்வி அடைந்துள்ளார். இதனால், இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த போட்டியில் சுசில் குமாருக்கு அடுத்து வெள்ளி பதக்கம் வென்ற 2வது இந்தியர் தாஹியா ஆவார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் வரிசையில் ரவி, 4வது இந்தியர் மற்றும் ஒட்டு மொத்தத்தில் 5வது இந்தியர் ஆவார்.
அவருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றிய அவரது வாழ்த்து செய்தியில், மற்போரில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ள ரவி குமார் தஹியாவுக்கு வாழ்த்துகள்.
ஒலிம்பிக் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்ற இரண்டாவது இந்திய மற்போர் வீரர் இவர் என்பதே இவரது அரிய சாதனையின் பெருமையை பறைசாற்றும். அவரது எதிர்கால வெற்றிகளுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.