

சென்னை,
திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து, சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பாகப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று, தற்போது தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் , ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாகப் பள்ளிகள், கோவில்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்த முதல்-அமைச்சர் விஜய், தற்போது பாதிக்கப்பட்ட ஒரு சக சினிமா கலைஞருக்கு உதவி செய்து தனது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை, தனது மனைவியின் மருத்துவச் சிகிச்சைக்காக முதல்-அமைச்சர் விஜய்யிடம் உதவி கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
முத்துக்காளையின் மனைவிக்கு (47) சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட கடுமையான தொற்று பாதிப்பால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, கடந்த 17 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவியின் (Ventilator) உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது மனைவிக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை கிடைக்க முதல்-அமைச்சர் விஜய் உதவ வேண்டும் என முத்துக்காளை வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்கள் மூலம் முதல்-அமைச்சர் விஜய்யின் கவனத்திற்குச் சென்ற நிலையில், அமைச்சர் ராஜ்மோகனை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி, அவருக்கு தேவையான அனைத்து அதிநவீன உயர்தர மருத்துவச் சிகிச்சைகளையும் தங்குதடையின்றி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
முத்துக்காளை ஏற்கனவே விஜய்யுடன் 'யூத்', 'தமிழன்', 'மின்சாரக் கண்ணா', 'பகவதி', 'சுறா' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.