

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆன பிறகு இன்ஸ்டாகிராமில் விஜய்யை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் மோகம் அதிகமாகவே இருந்து வருகிறது. அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பலர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இதன் மூலமாக பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி பலர் வருவாயும் ஈட்டி வருகிறார்கள்.
இதுபோன்று இன்ஸ்டாகிராம் அதிகம் பயன்படுத்தும் இளம் தலை முறையினர் தங்களுக்கு பிடித்தமான தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களையும் பின் தொடர்கிறார்கள்.
அந்த வகையில் பிரதமர் மோடி உலக அளவில் இன்ஸ்டா கிராமில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை 10.2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். மத்திய மந்திரிகளில் அமித்ஷாவை 3.22 கோடி பேரும், நிதின் கட்கரியை 66 லட்சம் பேரும் பின் தொடர்கிறார்கள்.
எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தியை 1.47 கோடி பேர் பின் தொடர்ந்து வரும் நிலையில் தமிழ்நாடு முதல்- அமைச்சர் விஜய் அவரை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளார். முதல்-அமைச்சர் விஜய்யை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது.
மஜ்லீஸ் கட்சி தலைவர் ஓவைசியை 1.25 கோடி பேரும், டெல்லி முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை 40 லட்சம் பேரும் பின் தொடரும் நிலையில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும். தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேரும் பின் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராமை பொறுத்தவரையில் இன்று அது மிகப்பெரிய பிரசார களமாகவே மாறியுள்ளது என்று கூறலாம். டெல்லியில் சமீபத்தில் இளைஞர்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூகவலை தளம் மூலமாகவே மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினார்கள்.
த.வெ.க.வினர் பலரும் இன்ஸ்டாகிராம் மூலமாக கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள்.
இளைஞர்களின் ஆதரவு சட்டமன்ற தேர்தலில் அதிக அளவு கிடைத்ததால் தான் விஜய் முதல்-அமைச்சராக முடிந்தது. அந்த வரிசையில் தான் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துள்ளது.