கூட்டுறவு வங்கியில் விஷம் குடித்து கூடுதல் செயலாளர் சாவு

வேப்பந்தட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கூடுதல் செயலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டுறவு வங்கியில் விஷம் குடித்து கூடுதல் செயலாளர் சாவு
Published on

தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது 54). இவர் அதே ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு சரஸ்வதி (45) என்ற மனைவியும், அருண்குமார் (17), ராஜவிக்னேஷ் (8) என 2 மகன்களும் உள்ளனர். கடந்த 1991-ம் ஆண்டு விற்பனையாளராக பணியில் சேர்ந்த கணபதி தற்போது கூடுதல் செயலாளராக வங்கியில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் வீட்டிலிருந்து வங்கிக்கு சென்றவர், வங்கியின் உள்ளே விஷம் குடித்து இறந்து கிடந்தார். காலை 10 மணி அளவில் பணிக்கு வந்த வங்கியின் கணினி ஆபரேட்டரான கமலாதேவி இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து, சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர்.

பணிச்சுமையா?

பின்னர் அவர்கள் இதுகுறித்து அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கணபதி நேற்று முன்தினம் பணி காரணமாக திருவண்ணாமலையில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு சென்றுவிட்டு அன்று நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.. மேலும் கணபதி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேப்பந்தட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com