

ஆலந்தூர்,
தமிழக பாரதீய ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னையில் அமைச்சர் தங்கமணியுடன் கூட்டணி குறித்து 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் மீண்டும் விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
விமான நிலையத்தில் அவரை வழியனுப்பி வைத்துவிட்டு வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய மந்திரி பியூஸ்கோயல், தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் முதல் முறையாக சென்னை வந்தார். தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தையை தொடங்கி வைத்தார். நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பேச்சுவார்த்தை மேலும் தொடரும்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருக்கிறது. பாரதீய ஜனதா இரட்டை இலக்கு குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. கூட்டணி பற்றி விரைவில் முடிவு ஆகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.