கோவை குண்டு வெடிப்பு வழக்கு: 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது

சத்தீஷ்கார் மாநிலத்தில் தலைமறைவாக இருந்தவரை, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கு: 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது
Published on

கோவை,

கோவையில் கடந்த 1998ல் நடந்த தொடர் வெடிகுண்டு வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா (எ) சாதிக் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஷ்காரில் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்து தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

இந்நிலையில் போலீசார் உஷார் நிலையில் இருக்க கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கடந்த 1998 ஆம் ஆண்டு, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கோவையில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அவர் பேச இருந்த மேடை அருகே திடீரென குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து, 14 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் மொத்தம் 58 பேர் பரிதாபமாக பலியாகினர், 231 பேர் படுகாயம் அடைந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com