கோவையில் வாலிபர் அடித்துக் கொலை.. 6 பேர் கைது

கைது செய்யப்பட்ட நபர்கள் 6 பேரும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இளைஞரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது.
மண்ணில் புதைக்கப்பட்ட சடலம்
Published on

கோவை,

கோவை செட்டிபாளையம் அருகே மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கை மட்டும் வெளியே தெரிந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மண்ணில் தெரிந்த கை

கோவை செட்டிபாளையம் அடுத்துள்ள ஒத்தக்கால் மண்டம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காலி இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தில் மனித கை ஒன்று மட்டும் மண்ணிற்கு வெளியே தெரிவதைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தோண்டி எடுத்த போலீஸ்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், அந்த இடத்தை தோண்டி பார்த்தனர். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க இந்த பாழடைந்த இடத்தில் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.

6 பேர் கைது

இதுகுறித்து சந்தேகத்தின் பேரில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த துய்தே ரியாங் (22), சுனில் ராய் ரியாங் (24), கோதோ ராம் ரியாங் (30), சுமித் குமார் (20), ஸ்ரமித் தராங் (35), சந்தோஷ் குமார் (20) ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாதல் ஷித் (வயது 24) என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் பாதலை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். எதற்காக இந்த கொலையைச் செய்தார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com