

கோவை,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்தவர் பயாஸ்அகமது, தொழில் அதிபர். இவர் கடந்த 2015-16-ம் ஆண்டு வருமான வரியாக ரூ.24 கோடியே 80 லட்சத்தை செலுத்த வேண்டியது இருந்துள்ளது. ஆனால் ரூ.2 லட்சத்தை மட்டும் செலுத்திவிட்டு முறைகேடாக பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்து மீதி தொகையை பயாஸ்அகமது செலுத்தவில்லை.
இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், சி.பி.ஐ. அதிகாரிகள் பயாஸ்அகமது மீது கடந்த 2019-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது வங்கி கணக்கும் முடக்கி வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோவை சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும், தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சிவக்குமார், குற்றம் சாட்டப்பட்ட பயாஸ்அகமதுவுக்கு, அவர் வருமானவரித்துறையிடம் மோசடி செய்த தொகையையே அபராதமாக விதித்தார். மொத்தம் ரூ.24 கோடியே 80 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார்.