கோவை கார் வெடிப்பு வழக்கு; கைதான நபர் மீது தாக்குதலா? - என்.ஐ.ஏ. பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய புழல் சிறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவை கார் வெடிப்பு வழக்கு; கைதான நபர் மீது தாக்குதலா? - என்.ஐ.ஏ. பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அசாருதீன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரித்த தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள், விசாரணையின் போது அசாருதீனை துன்புறுத்தியதாக அசாருதீனின் தந்தை முகமது யூசுப் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் அசாருதீனை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கியதாகவும், இதனால் அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அசாருதீனுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அசாருதீனின் தந்தை கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர், நீதிபதி நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி புழல் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் அசாருதீனின் தந்தை தாக்கல் செய்த மனுவிற்கு தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com