கோவை தேர்தல் வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

கோவை தேர்தல் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.
கோவை தேர்தல் வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த டாக்டர் சுதந்திர கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ''நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க சென்றபோது, வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மற்றும் எனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை எனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. அதே முகவரியில் வசிக்கும் எனது மகள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. இதேபோல, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு சுதந்திர கண்ணன் தரப்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com