

சென்னை,
தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் பய ணிகள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில் கோவையில் இருந்து ஈரோடு, சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலின் இயக்க காலம் நடப்பு வாரத்தோடு முடிவடையும் நிலையில் அடுத்த மாதம் (மார்ச்) வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, கோவை-ஜெய்ப்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06181) வருகிற 26-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 5, 12, 19, 26-ந் தேதி (வியாழக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. கோவையில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு வழியாக சேலம் ரெயில் நிலையத்திற்கு அதிகாலை 5.10 மணிக்கு வந்தடையும்.
அதன்பிறகு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கர்நூல் சிட்டி, கச்சிக்குடா, நான்டெட், நசிராபாத், அஜ்மீர் வழியாக ஜெய்ப்பூருக்கு சனிக்கிழமை மதியம் 1.25 மணிக்கு சென்றடைகிறது. அதேபோல், மறுமார்க்கத்தில் ஜெய்ப்பூர்-கோவை வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06182) அடுத்த மாதம் 1, 8, 15, 22, 29-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது.
ஜெய்ப்பூரில் இரவு 10.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் சேலத்திற்கு புதன்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு வந்தடையும். அதன்பிறகு ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு காலை 8.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. எனவே இந்த ரெயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.