

வடவள்ளி,
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மருதமலை சாலையில் அமைந்து உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வந்து பயின்றுவரும் மாணவர்கள் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவிகள் தங்கி உள்ள செல்லம்மாள் விடுதியில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளனர். இந்த விடுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இரண்டு மர்ம நபர்கள் அரைகுறை ஆடையுடன் விடுதி வளாகத்திற்குள் நுழைந்து , செல்போன்களை திருடி செல்வதாகும் மாணவிகள் புகார் அளித்தனர். இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்றும் அதே மர்ம நபர்கள் இரவில் அரை குறை ஆடையுடன் விடுதிக்கு வந்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கல்லூரி முன்பு உள்ள சாலையை மறிக்க முயன்ற போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் கல்லூரி வளாகத்தின் முன்பு அமர்ந்து மீண்டும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.