

கோவை,
கோவை – சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் அன்னூர் அருகே இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் திமுக நிர்வாகி உட்பட இருவர் உயிரிழந்தனர்.
சூலூர் பகுதி பாப்பம்பட்டி கிளைச் செயலாளரான கதிரேசன் (45), தனது நண்பர் வேல்முருகன் மற்றும் குடும்பத்தினருடன் பண்ணாரி அம்மன் கோவில் சென்று வழிபாடு முடித்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் சென்ற காரின் மீது மோதியது.
இந்த விபத்தில் கதிரேசன் மற்றும் வேல்முருகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த குடும்பத்தினர் 7 பேரும், தண்ணீர் லாரி ஓட்டி வந்த அதன் உரிமையாளரும் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.