பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு - பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள்

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. பயன்பெறுமாறு கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு - பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள்
Published on

2020-21 மற்றும் 2021-22-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்ட படிப்பை தாட்கோ மூலம் எச்.சி.எல் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவ- மாணவிகளுக்கு முதலாம் ஆண்டில் எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும். முதல் 6 மாதங்களுக்கு இணையவழி மூலமாக பயிற்சிகள் நடத்தப்படும். பயிற்சிக்கு தேவையான மடிக்கணினியை நிறுவனமே வழங்கும்.

அடுத்த 6 மாதத்தில் சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா, லக்னோ மற்றும் நாக்பூர் போன்ற நகரங்களில் அமைந்துள்ள எச்.சி.எல் நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும்.

முதலாம் ஆண்டில் 6-வது மாதம் முதல் மாணவர்களுக்கு மேற்படி நிறுவனத்தின் வாயிலாக ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். 2-வது ஆண்டில் மாணவர்களுக்கு 3 விதமான கல்லூரிகளில் தகுதியின் அடிப்படையில் பட்டப்படிப்பு பயில வழிவகை செய்யப்படும். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியாவிலேயே மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி, டிசைன் அண்ட் கம்ப்யூட்டிங் பாடப்பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.

இந்த படிப்பானது பி.டெக்குக்கு சமமான படிப்பாகும். இந்த 4 ஆண்டு பட்டப்படிப்பினை எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்த கல்லூரியில் சேருவதற்கு 12-ம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தகுதிக்கேற்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் 3 வருட பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் 3 வருடம் பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.காம், பட்டபடிப்பு படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

மேற்காணும் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி பெறுவதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும் 2020- 21 மற்றும் 2021- 22- ம்ஆண்டு 12-ம் வகுப்பில் கணிதம் மற்றும் வணிக கணிதம் பாடத்தில் மொத்த மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். இதில் தாட்கோவின் பங்களிப்பாக எச்.சி.எல் நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வில் பங்கேற்பதற்கு திறன் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஒவ்வொரு மாணவர்களுக்கும் பயிற்சி கட்டணமாக பயிற்சிக்கான கட்டணத்தொகை தாட்கோவே ஏற்கும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் கல்வி கட்டண தொகையை முதல் 6 மாத பயிற்சி காலத்தில் தாட்கோ கல்வி கடனாக வழங்கும். மேற்படி நிபந்தனைகளின்படி தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நுழைவு திறனுக்கான மூன்று பாட பிரிவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர், இணையவழி வாயிலாக நுழைவு தேர்வு நடத்தப்படும்.

இது தேர்வில் மூன்று பாடப்பிரிவுகளிலும் குறைந்தபட்சமாக 10 மதிப்பெண்ணுக்கு 4 மதிப்பெண் பெற்றால் போதுமானதாகும். மேலும் இந்த திட்டம் தொடர்பான விவரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் மாவட்ட மேலாளர் தாட்கோ திருவள்ளூர் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com