திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1-ம் தேதி மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

விதிகளை மீறி மே 1-ம் தேதி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1-ம் தேதி மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
Published on

திருநெல்வேலி,

மே தினத்தை முன்னிட்டு வருகிற மே 1-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசாணைகள் மற்றும் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை ஆணையரின் கடித வழிகாட்டுதலின்படி, மே 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மே தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள் (FL1 உரிமம்), கடைகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் (Bar), தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் இவை அனைத்தும் மே 1-ம் தேதி கட்டாயம் மூடப்பட வேண்டும்.

விதிகளை மீறி அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com