செட்டிநாடு கால்நடை பண்ணையில் கலெக்டர் ஆய்வு

காரைக்குடி அருகே செட்டிநாடு கால்நடை பண்ணையின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆஷாஅஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செட்டிநாடு கால்நடை பண்ணையில் கலெக்டர் ஆய்வு
Published on

காரைக்குடி

காரைக்குடி அருகே செட்டிநாடு கால்நடை பண்ணையின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆஷாஅஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் காரைக்குடி அருகே செட்டிநாடு ஊராட்சி பகுதியில் உள்ள கால்நடை பண்ணையில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் கால்நடைகளுக்கு தேவையான கால்நடை தீவனம், மரங்கள் மற்றும் பல்வேறு வகையான 600 மாடுகள் வளர்க்கப்படும் கால்நடை கொட்டகைகள், கன்றுக்குட்டி கொட்டகைகள், பால் கறவைக்கூடம், பல்வேறு வகையான ஆடுகள் வளர்க்கப்படும் கொட்டகைகள், அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வளர்க்கப்படும் கோழிக்கொட்டகைகள் ஆகிய இடங்களில் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கடந்த 2021-22-ம் ஆண்டு செட்டிநாடு மாவட்ட கால்நடை பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை உருவாக்குதல், தீவன ஆலை அமைத்தல், குஞ்சு பொரிப்பகம் அமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.13.81 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட அவர், பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் 1258 அசில் இன கோழிகளை மேலும் பெருக்குவதற்கான அறிவுரைகளை அங்கிருந்த அதிகாரிகளுக்கு வழங்கினார்.

துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள்

மேலும் பண்ணையில் உள்ள ஆடுகள் பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் ஆடுகளில் 98 எண்ணிக்கை கொண்ட ராமநாதபுரம் வெள்ளை இன செம்மறி ஆடுகள் மற்றும் 259 எண்ணிக்கை கொண்ட தலைச்சேரி, ஜமுனாபாரி இன வெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதேபோல் மாட்டு இன பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் மாடுகளில் 425 தார்பார்கர், சாகிவால் இன மாடுகளில் பால் உற்பத்தியை மேலும் பெருக்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அறிவுறுத்தினார். இந்த பண்ணையில் உள்ள விவசாய பிரிவில் 40 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படும் கோ-4 தீவனபுல், 150 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படும் மரத்தீவனபுல், 15 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுச்சோளம் ஆகியவற்றை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கவும், பண்ணையில் உற்பத்தி செய்யும் ஊறுகாய்புல் தீவன கட்டுக்கள், அனைத்து கருவிகளையும் செயல்படும் நிலையில் பராமரித்து உற்பத்தியை மேலும் பெருக்குவதற்குரிய அறிவுரைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கினார். இந்த ஆய்வின் போது கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன், கால்நடை உதவி மருத்துவர்கள் நட்ராஜன், பிரபாகரன், விவசாய மேலாளர் இதயத்துல்லா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com