

திருப்பத்தூர்,
நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், காதலித்த வாலிபர் மிரட்டியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை கோடியூர் பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகம் அலமேலு தம்பதி. இவர்களுடைய மகள் ஸ்ரீ தர்ஷினி (20 வயது). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார்.
இவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் பேசி முடித்திருந்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு மங்குண்டு பெருமாள் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை மணமகன், மணமகள் வீட்டார் தீவிரமாக செய்து வந்தனர்.
மாணவியை வாலிபர் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவிக்கு திருமணம் நடக்க இருந்ததை அறிந்த அந்த வாலிபர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு என்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வாயா? என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி ஸ்ரீ தர்ஷினி மனமுடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம்போல் தூங்கச்சென்றனர். நேற்று காலையில் பார்த்தபோது மாணவி ஸ்ரீ தர்ஷினி படுக்கையில் பிணமாக கிடந்தார். அருகில் சென்று பார்த்தபோது அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஸ்ரீ தர்ஷினியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மாணவியை காதலித்த வாலிபர் செல்போனில் மிரட்டியது தெரிய வந்தது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.