ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி

கோவில்பட்டி அருகே ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி
Published on

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக நேற்று காலையில் தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் விளாத்திகுளம் தாலுகா ஜமீன் செங்கல்படை கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கதிரேசன் (வயது 18) என்பதும், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு புவி அமைப்பியல் படித்து வந்ததும் தெரியவந்தது. அவர் மைசூருவில் இருந்து தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்து உள்ளது.

இதையடுத்து கதிரேசன் உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து காண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com