வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் போக்சோவில் கைது

கோப்புப்படம்
வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை வடபழனி பகுதியில் வசித்து வரும் 17 வயது கல்லூரி மாணவி, அங்குள்ள மருந்து கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து தனியாக வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது மாணவியை பின்தொடர்ந்து வந்த வாலிபர், வீடு புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த மாணவி கத்தியை எடுத்து மிரட்டியதால் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்த புகாரின்பேரில் வடபழனி அனைத்து மகளிர் போலீசார் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் சம்பவம் நடந்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாலிகிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (30 வயது), என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விசாரணையில் குமரேசன், வடபழனியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு வந்து மது அருந்தினார். அப்போது தனியாக சென்ற கல்லூரி மாணவியை போதையில் பின் தொடர்ந்து சென்று வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது.






