நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
Published on

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருக மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

கொல்லங்கோடு அருகே உள்ள மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஜோபின் ஜோசப் (வயது23), மீன்பிடி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமன் என்கிற அகில் (24) என்பவரும் நேற்று முன்தினம் இரவு கால்லங்கோட்டில் இருந்து நித்திரவிளை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜோபின் ஜோசப் ஓட்டி சென்றார்.

அவர்கள் நித்திரவிளை அருகே உள்ள கிராத்தூர் பகுதியில் வந்த போது எதிரே அதே பகுதியை சேர்ந்த அஜித், ஆஸ்டின் ஆகியோர் நாகர்கோவிலில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு எழுதிவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

கிராத்தூர் திருப்பு பகுதியில் வைத்து எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின. இதில் அவற்றில் பயணம் செய்த 4 பேரும் தூக்கி வீசபட்டு படுகாயம் அடைந்தனர்.

பரிதாப சாவு

விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். அவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜோபின் ஜோசப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அகில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும் மற்ற இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com