

சென்னை நந்தனத்தில் வாக்களித்த பிறகு தயாநிதிமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் ஆவலாக எதிர்பார்த்த நாள் இந்த நாள். கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் பெற்ற துயரங்களுக்கு விடிவெள்ளியாக தமிழகத்தில் உதயசூரியன் உதிக்கப்போகிறது. அந்த உதயசூரியன் மு.க.ஸ்டாலின் வடிவில் உதிக்கப்போகிறது.
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகி அவர் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என மக்கள் நம்புகிறார்கள். அ.தி.மு.க.வை தமிழ்நாட்டு மக்கள் நம்புவதாக இல்லை. குறுக்கு வழியில் ஆட்சியில் அமர பார்க்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது.
தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என்றால், எடப்பாடி, போடி தொகுதியில்தான் ரத்து செய்ய வேண்டும். நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததை பார்க்கும்போது, அவர் மறைமுகமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்க்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.