

சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சேலம் மாவட்டம் மேச்சேரியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்வதில் திமுக நிர்வாகிகளிடையே போட்டி - சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரே அதற்கு உடந்தையாகச் செயல்படுவதா?
சேலம் மாவட்டம் மேச்சேரி காவல் நிலையத்தின் அருகிலேயே திமுக நிர்வாகிகளும், அவர்களது ஆதரவாளர்களும் பெட்டிக் கடையின் மூலம் போட்டிப் போட்டு சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதே மேச்சேரி பேருந்து நிலையத்தின் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி ஜாமீனில் வெளிவந்து காவல்துறையினரின் ஆதரவோடு மீண்டும் அதே சட்டவிரோத மதுவிற்பனை செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், சட்டத்திற்குப் புறம்பாகவும் நடைபெறும் மதுபான விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையினரே அதற்கு உடந்தையாக இருப்பதும், பொதுமக்கள் புகார் அளித்த பின்பும் நடவடிக்கை எடுக்க மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, சேலம் மேச்சேரி பேருந்து நிலையம் மற்றும் காவல்நிலையம் அருகே சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையைத் தடுத்து நிறுத்திடுவதோடு, அத்தகைய செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் காவல் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.