

சென்னை,
சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதல்-அமைச்சர் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரீகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கறிஞர் வர்த்தினி என்பவர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார். முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதாக நயினார் நாகேந்திரன் மீது அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் விமர்சனங்களை மீறி, குடும்ப உறுப்பினரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவது கவலைக்குரியது எனவும், நயினாரின் பேச்சுகள் மக்கள் மத்தியில் அவதூறு, வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், நயினார் நாகேந்திரன் பேச்சால் ஒரு பெண்ணாகவும், தாயாகவும் வேதனை அடைவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே முதல்-அமைச்சர் பற்றிய அநாகரிக பேச்சுக்கு முதல்-அமைச்சரிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நயினார் நாகேந்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அரசியலில் எதிரியாக இருக்கலாம்; அதற்காக நாகரிகத்தை எதிரியாக்கிக் கொள்ளக் கூடாது என்று அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.