ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.2 கோடி கேட்பதாக புகார்: த.வெ.க. நிர்வாகிகளின் ஆடியோ வைரல்

பாலசுப்பிரமணியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார்.
த.வெ.க. நிர்வாகிகள்
Published on

பல்லடம்,

ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட ரூ.2 கோடி வரை செலவாகும் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பேசியதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊராட்சி தலைவர் பதவி

திருப்பூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் சங்கர் (45), பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் (35) ஆகியோர், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோவில், தேர்தலில் போட்டியிட ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை செலவாகும் என சங்கர் கூறுவது இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

மேலும், பல்லடம் எம்.எல்.ஏ. ராம்குமாரை பாலசுப்பிரமணியம் சந்திக்க சென்றது தொடர்பான தகவல்களும் அந்த உரையாடலில் இடம்பெற்றுள்ளது.

புகார்

இதற்கிடையே, பாலசுப்பிரமணியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார். அதில், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், இதுதொடர்பாக சங்கரிடம் பேசியபோது, ரூ.2 கோடி வேண்டும் என அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த உரையாடலை யாரோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளதாகவும், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சங்கர் கூறுகையில், மற்ற கட்சியினர் தேர்தலில் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை செலவழிப்பதாகத்தான் தான் பேசியதாகவும், ஆடியோ பரப்பப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com