

கோவை,
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டவர் கணபதி. பதவி ஏற்ற பின் லஞ்ச பணம் பெற்று கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு பேராசிரியர் பணி வழங்கினார் என இவர் மீது புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவர் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் கணபதி மீது அளித்த புகாரின்பேரில் அவரை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது. சுரேஷ் கொடுத்த ரசாயனம் தடவப்பட்ட லஞ்ச பணத்தினை பெற முயன்றபொழுது துணைவேந்தர் கணபதியை அவரது இல்லத்தில் வைத்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கோவை பாரதியார் பல்கலை கழக தொலைதூர கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதியின் உறவினர் என தெரிய வந்துள்ளது.
பல்கலை கழக நியமன முறைகேட்டில் மதிவாணனுக்கு தொடர்பு உள்ளது என லஞ்ச ஒழிப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.