

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் 971 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதிசாய் பிரியா முன்னிலையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதேபோல் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் மற்றும் முன் வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதில் 971 வழக்குகளில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 28 ஆயிரத்து 271-க்கு சமரச தீர்வு காணப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி, குடும்ப நல வழக்கில் இணைந்த ஜோடிக்கு இனிப்பு மற்றும் மரக்கன்று வழங்கியும், பாகப்பிரிவினை வழக்கில் இணைந்த குடும்பத்திற்கு இனிப்புகள் வழங்கியும் வாழ்த்தினார்.
இதில் குடும்ப நல நீதிபதி நாகராஜன், மாவட்ட அமர்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா, முதன்மை சார்பு நீதிபதி மோகன்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெனிபர், நீதித்துறை நடுவர் எண்.1 கார்த்திக் ஆசாத், வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் ராமசந்திரன், செயலாளர் சத்தியநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.