போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த கல்பாக்கம் அணு நிலைய ஊழியருக்கு கட்டாய ஓய்வு

போலி சான்றிதழ் அளித்து வேலைக்கு சேர்ந்த கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய அறிவியல் உதவியாளருக்கு கட்டாய ஓய்வு வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த கல்பாக்கம் அணு நிலைய ஊழியருக்கு கட்டாய ஓய்வு
Published on

சென்னை,

மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 1987-ம் ஆண்டு பயிற்சியாளராக கணேசன் என்பவர் சேர்ந்தார். அப்போது தான் எஸ்.சி, பிரிவை சேர்ந்தவர் என்று கூறி சாதி சான்றிதழ் கொடுத்து வயது வரம்பு சலுகையை பெற்றுள்ளார். பின்னர் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்துக்கு பணி மாறுதல் பெற்று, தற்போது அறிவியல் உதவியாளராக பதவி உயர்வு பெற்றார்.

ஆனால், இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். எஸ்.சி. என்று போலி சாதி சான்றிதழை கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளார் என்று எஸ்.சி., எஸ்.டி., ஊழியர்கள் சங்கத்தினர் புகார் செய்தனர்.

பிரதமர் விருது

இதன்படி பதிவான வழக்கில் கணேசன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்த குற்றச்சாட்டுக்காக இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, தன் மீது பதிவான குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை, துறைரீதியான நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்கக்கோரி சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் கணேசன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மனுதாரர் கணேசன் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி விட்டார். 5 பதவி உயர்வுகளை பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல பிரதமர் விருது, மத்திய அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். எனவே, குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை, துறைரீதியான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது.

திறமையற்ற செயல்

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய இயக்குனர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், முகமது சபீக் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டு 7 ஆண்டுகள் கழித்து, 2020-ம் ஆண்டு இந்த மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அதிகாரிகளின் திறமையற்ற செயலை காட்டுகிறது. இதனால் தகுதி இல்லாதவர்கள் பல ஆண்டுகள் ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. கணேசன் போலி சாதி சான்றிதழ் கொடுத்துள்ளார் என்று தெளிவாகுகிறது.

கட்டாய ஓய்வு

அதேநேரம், அவர் ஜனாதிபதி விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். எனவே, அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிடுகிறோம். அவருக்கு 40 சதவீதம் ஓய்வூதியம் மட்டுமே வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதியை தவிர பிற ஓய்வூதிய பலன்களை அவருக்கு வழங்கக்கூடாது. தவறு செய்யும் ஊழியர்கள் ஓய்வுப்பெற்ற பிறகும் துறைரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஏதுவாக மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com