

சென்னை
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 35 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் தொற்று குறைந்ததால் வழங்கப்பட்ட தளர்வில் அரசு திறந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி இன்று ஊரடங்கின் போது மதுக்கடைகள் திறந்ததைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்திப் பா.ம.க சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாகச் சென்னை தியாகராய நகரில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி அவர் வீட்டின் முன் கோரிக்கை முழக்கமிட்டார்.
இதுகுறித்து பா.ம.க இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையில், தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் பா.ம.கவின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகளின் வீடுகள் முன் கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து 5 பேருக்கு மிகாமல் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அவரது ஆணைப்படி, தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், நாட்டு மக்களின் நலன் கருதி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் சென்னையில் உள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இல்லத்தின் முன் மதுவிலக்குக்கு ஆதரவாகவும், மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராகவும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பா.ம.கவினர் அறப் போராட்டம் நடத்தினார்கள் இவ்வாறு அதில் கூறப்ப்ட்டு உள்ளது .