

வாகன சோதனை
குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவுபடி நாமக்கல் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி அத்தியாவசிய பொருட்களை கடத்தும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பரமத்திவேலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சரக்கு வாகனம் ஒன்றில் ரேஷன்அரிசி மூட்டைகள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 4 ரோடு அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 21 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து ரேஷன்அரிசி மூட்டைகளை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீசார், ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னார் (வயது36), குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சக்திவேல் (47) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.