தமிழிசை சவுந்தரராஜனுடன் நடந்த மோதல் விவகாரம்: தூத்துக்குடி மாணவிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

தமிழிசை சவுந்தரராஜனுடன் நடந்த மோதல் விவகாரம்: தூத்துக்குடி மாணவிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு மனித உரிமை ஆணையம் உத்தரவு.
தமிழிசை சவுந்தரராஜனுடன் நடந்த மோதல் விவகாரம்: தூத்துக்குடி மாணவிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
Published on

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்த தூத்துக்குடி விமானத்தில், ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா தனது பெற்றோருடன் பயணம் செய்தார். அப்போது பா.ஜ.க.வுக்கு எதிராக சோபியா கோஷம் எழுப்பியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதுதொடர்பான புகாரில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட சோபியா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்ததாக கூறி சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சோபியா கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது. எனவே, சோபியாவுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்.

இந்த தொகையை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஆர்.திருமலையிடம் இருந்து ரூ.50 ஆயிரமும், அப்போதைய புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஜெ.அன்னத்தாய் (தற்போது இவர் ஓய்வு பெற்று விட்டார்), சப்-இன்ஸ்பெக்டர் ஏ.கே.லதா, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் சூப்பிரண்டு வி.பொன்ராமு, தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி. ஆர்.பிரகாஷ், எஸ்.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ஜி.பாஸ்கரன், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் எஸ்.நம்பிராஜன் ஆகியோரிடம் இருந்து தலா ரூ.25 ஆயிரம் வீதம் வசூலித்து கொள்ளலாம். இவர்கள் 7 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை வழங்கப்படும் குற்ற வழக்கில் மட்டுமே கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை போலீசார் பின்பற்ற டி.ஜி.பி. அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com