தவெக அரசில் காங்கிரசுக்கு 2 அமைச்சர்கள்; மாணிக்கம் தாகூர் தகவல்

36% கமிஷன் அரசியலிலிருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்குத் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்
தவெக அரசில் காங்கிரசுக்கு 2 அமைச்சர்கள்; மாணிக்கம் தாகூர் தகவல்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி அமைத்துள்ளது. தவெக அரசுக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. அதேவேளை, கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று தேர்தலின்போது தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தேர்தலின்போது தவெக கூட்டணிக்கு எந்த கட்சியும் வரவில்லை. தேர்தல் நிறைவடைந்த நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் தவெகவுக்கு காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் ஆதரவு அளித்தன. இதன் மூலம் ஆட்சியை தவெக கைப்பற்றியது. முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 9 தவெக எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். அமைச்சர்களுக்கு இலாகா இதுவரை ஒதுக்கப்பட உள்ளது.

இந்நிலையில், தவெக அரசில் 2 காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

2026 தேர்தலுக்கு முன்பே திமுக “ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது.

அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனர்.

ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய தவெக தலைவர் விஜய் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார்.

தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.

36% கமிஷன் அரசியலிலிருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்குத் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும்.

புதிய அரசு. புதிய நம்பிக்கை. #தவெக #காங்கிரஸ்

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com