

சென்னை,
சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் விதமாக காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டு வருகிறது. விற்பனை செய்யும் போது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்து, காலி பாட்டிலை திருப்பித்தரும்போது அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் திட்டத்தை ஐகோர்ட்டு உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் காலிமது பாட்டில்களை திரும்ப வாங்கும் திட்டத்தை மாற்றியமைக்க உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது, பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வசூலிப்பதற்கு பதிலாக அந்த தொகையை மதுபான விற்பனை விலையுடன் சேர்த்து விற்க திட்டமிடப்பட் டுள்ளது. அதன்படி, காலி மது பாட்டில்களை சேகரித்து திரும்பப் பெறுவது. கொண்டு செல்வது. மறு சுழற்சி செய் வது என அனைத்து பொறுப்புகளையும் சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வசமே ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள மதுவிலக்குத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மதுபானங்களின் அதிக பட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ.10-ஐ செஸ் வரியாக விதிக்க அரசுக்கு வணிக வரித்துறை ஆணையர் கருத்துரு அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக மதிப்பு கூட்டுவரியின் சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்து. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.