

சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்றத்தில் தொகுதி சீரமைப்பு மற்றும் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதாக்களை எதிர்க்கட்சிகள் உறுதியாக எதிர்க்க வேண்டும். ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், உரிமையையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான பிரச்சினை இது. கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் முயற்சியால் மக்களவையில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்தது.
தற்போது மீண்டும் அந்த முயற்சியை மத்திய பா.ஜனதா அரசு மேற்கொண்டு வருகிறது. தொகுதி எண்ணிக்கையை உயர்த்துவது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்றும் ஆபத்து கொண்டது. இந்த சூழ்ச்சியை எதிர்க்கட்சிகள் உணர்ந்து, வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைய வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவையும், தொகுதி சீரமைப்பு மசோதாவையும் முடிச்சுப்போட்டு அரசியல் செய்யப் பார்க்கும் பா.ஜனதாவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
ஏற்கெனவே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், அதை உடனே செயல்படுத்தாமல் தொகுதி மறுவரையறைக்குக் காத்திருப்பது பா.ஜனதாவின் உள்நோக்கம். ஆரிய நரித்தனமான இந்த மாயவலையில் சிக்காமல், தொகுதி சீரமைப்பு மசோதாவை ஏற்கக்கூடாது என்பதில் தமிழ்நாட்டுக் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும். அரசியல் பிழை இழைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் எந்தச் சூழலிலும் சறுக்கிவிடக் கூடாது. இது எதிர்காலத் தலைமுறை சார்ந்த உரிமையைக் காக்கும் போராட்டமாகும் என்பதால், அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.