தொகுதி மறுவரையறை: முதல்-அமைச்சர் விஜய் இன்று நடத்தும் எம்.பி.க்கள் கூட்டத்தில் தி.மு.க.பங்கேற்குமா?

தொகுதி மறுவரையறை பிரச்சினை குறித்து இந்தியாவிலேயே முதலில் பேசியது தி.மு.க. தான் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் விஜய், உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை,

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய், இன்று நடத்தும் எம்.பி.க்கள் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என்பது குறித்து சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.

தொகுதி மறுவரையறை

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் இன்று நடத்தும் எம்.பி.க்கள் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என்ற கேள்வி சட்டமன்றத்தில் எழுந்தது.

இதுபற்றிய விவாதம் வருமாறு:-

தி.மு.க. உறுப்பினர் ரகுபதி:-

இந்த அரசு மத்திய அரசிடம் சரண்டராகிவிட்டது என்பதற்கான எடுத்துக்காட்டு 'வெற்றி 150 நாட்கள்' திட்டம். 'விபி ஜி ராம் ஜி' என்ற மத்திய அரசின் திட்டத்தை நாங்கள் வேண்டாம் என்றோம். இதனால் அப்போது எங்களுக்கு ரூ.3,591 கோடி வரவில்லை. எனினும் உங்களிடம் (மத்திய பா.ஜனதா அரசு) எந்த காலத்திலும் பணியமாட்டோம் என்று சொல்லி விட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்தான் வேண்டும் என்று வலியுறுத்தினோம். 'விபி ஜி ராம் ஜி' திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் தேர்தலில் எப்படி சத்தமே இல்லாமல் வந்தீர்களோ, அதே போல் சத்தமே இல்லாமல் இதை செய்துள்ளீர்கள்.

தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்பார்களா?

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:-

மத்திய அரசிடம் அமைதியாக சரண்டராகி விட் டோம் என்று உறுப்பினர் சொல்கிறார். தமிழ்நாட்டின் பிரச்சினை, தென்மாநிலங்களின் பிரச்சினையான தொகுதி மறுவரையறை குறித்து முதல்-அமைச்சர் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை நாளை (இன்று) கூட்டி இருக்கிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கலந்து கொள்வார்களா? இல்லையா? என்பதை எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்கிறேன். (மேலும் ஒரு தகவலை அமைச்சர் கூறினார். அதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார்).

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்:-

தொகுதி மறுவரையறை பிரச்சினை குறித்து இந்தியாவிலேயே முதலில் பேசியது தி.மு.க. தான், எங்களுடைய தலைவர்தான். சென்ற ஆண்டு தென்மாநிலங்களை சேர்ந்த அனைத்து முதல்-மந்திரிகளையும் சென்னைக்கு வரவழைத்து மிகப்பெரிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, தொகுதி மறுவரையறையை எதிர்த்து இந்தியாவிலேயே முதல் முதலாக எங்களுடைய தலைவர்தான் குரல் கொடுத்தார்.

இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டுகிறீர்கள். இதற்கு சரியான முடிவை எங்களுடைய தலைவர் ஆலோசனை செய்து எடுப்பார்.

அமைச்சர் ஆனந்த்:-

சென்ற ஆட்சியில் 2026-27-ம் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.3 ஆயிரம் கோடி 'விபி ஜி ராம் ஜி' திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது. சென்ற ஆட்சியில் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com