

சென்னை,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்பு வணிக வளாகம் கட்ட தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசு காலதாமதம் செய்கிறது என அதிருப்தி தெரிவித்தார்.
புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க விரும்பவில்லை என்றால் அதனை கோர்ட்டில் தெரிவித்து விடலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். ஆணையத்திற்கு பணியாளர்கள் நியமிப்பது தொடர்பாக ஒப்புதல் பெற வேண்டி உள்ளதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என அறநிலையத்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இருப்பினும், தமிழகத்தில் மட்டுமே உள்ள தொன்மை வாய்ந்த கோவில்கள், கட்டிடங்களை நாம் மீண்டும் அமைக்க முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம், தமிழகம் முழுவதும் புராதன கோவில்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டுள்ளது.