

ஜெராக்ஸ் எந்திரம் பழுதானதால் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நிறுவனத்துக்கு திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெராக்ஸ் எந்திரம் பழுது
திருவாரூர் மாவட்டம் சீதக்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜெராக்ஸ் எந்திரத்தை ரூ.46 ஆயிரத்து 500-க்கு கும்பகோணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து வாங்கினார். அதற்கு 2 ஆண்டுகள் வாரண்டி இருந்த நிலையில் 4 மாதங்களில் பழுதாகி உள்ளது. இதையடுத்து எந்திரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் கொடுத்தும் பழுதை சரி செய்து கொடுக்கவில்லை.
அதற்கு மாறாக புதிய எந்திரமும் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முருகானந்தம் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இழப்பீடு வழங்க உத்தரவு
வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி தீர்ப்பு அளித்தார். அதில் ஜெராக்ஸ் எந்திர நிறுவன மேலாளர் மற்றும் சர்வீஸ் என்ஜினீயர் ஆகியோர் முருகானந்தத்துக்கு வருமான இழப்பு ஏற்படுத்தியதற்காக ரூ.60 ஆயிரமும், மன வேதனை, மன உளைச்சலுக்காக ரூ.2 லட்சமும், கூடுதலாக சேவை குறைபாட்டிற்காக ரூ.1 லட்சமும், வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்தை இழப்பீடாக 6 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.