அசுத்தமான குடிநீர்.. மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு..? - நயினார் நாகேந்திரன் கேள்வி


அசுத்தமான குடிநீர்.. மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு..? - நயினார் நாகேந்திரன் கேள்வி
x

கோப்புப்படம்

மக்களுக்கு சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதநகர் ஆகிய தென் மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டங்களின் (cwsss) கீழ் வழங்கப்படும் குடிநீரானது மாசுபட்டிருப்பதாகவும், உறை கிணறுகளுக்கு பதிலாக தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீரால் மக்கள் அவதியுறுவதாகவும் வெளியாகி உள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன.

இயற்கையாகவே அசுத்தங்களை வடிகட்டி குடிநீரை சுத்திகரிக்கும் அமைப்பு கொண்ட உறை கிணறுகள், நிறந்தவெளி மலம் கழித்தல், கழிவுகளை கொட்டுதல் மட்டுமன்றி ஒப்பந்ததாரர்களின் மெத்தனப்போக்கால் முற்றிலுமாக சேதமடைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள தகவல். திராவிட மாடல் அரசின் நிர்வாகக் குளறுபடிகளைத் தோலுரித்துக் காட்டுகிறது.

ஆனால் குழாய்ப் போக்குவரத்து மூலம் குடிநீரில் உள்ள கழிவுகள் வடிகட்டப்படுகின்றன எனவும், ஆற்றிலிருந்து நேரடியாகக் குடிநீர் பெறப்படுவது தற்காலிகமானது தான் எனவும் வாய்க்கு வந்ததைக் கூறி தங்கள் நிர்வாகத்தின் மீதுள்ள புகார்களை மூடி மறைக்க முயலும் திமுக அரசு, அசுத்தமான குடிநீரைக் குடித்து மக்களின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டால் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுமா..?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்த சோகத்தையே தமிழகம் இன்னும் மறக்கவில்லை. ஆனால் அத்தகைய துயர விபத்திலிருந்து எந்தப் பாடங்களையும் கற்றுக் கொள்ளாமல் அப்பாவி மக்களின் உயிரை இந்த ஆளும் அறிவாலய அரசு இப்படி அலட்சியப்படுத்துவது ஏன்? கோடை வெயில் வாட்டி வதைக்கையில் சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவது ஆபத்தானதல்லவா?

உரிமைகளைப் பற்றி மேடைக்கு மேடை பிறருக்கு வகுப்பெடுக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு, குழநீர் என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதும் அதை முறையாக மக்களுக்கு வழங்க வேண்டியது ஆளும் அரசின் கடமை என்பதும் தெரியாதா?

எனவே இதுகுறித்த உயர்மட்ட விசாரணையை உடனடியாகத் துவங்குவதோடு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாட்டையும் சீர் செய்து மக்களுக்கு சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டுமென் தமிழ்நாடு முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story