தொடர் கனமழை...!! சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடல்

தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர் கனமழை...!! சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடல்
Published on

சென்னை,

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இதனிடையே தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள்பாதிக்கப்பட்டு உள்ளன. அபுதாபி, துபாய், கொழும்பு, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 8 விமானங்கள், மழை மற்றும் காற்றால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. பின்னர் அந்த விமானங்கள் அனைத்தும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.

அதேபோல, சென்னையில் இருந்து துபாய், கொச்சி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லக்கூடிய 10 விமானங்கள் மற்றும் அந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 10 விமானங்கள் என மொத்தம் 20 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மிக்ஜம் புயல் எதிரொலியாக விமான நிலைய ஓடுதளத்தில் மழைநீர் தேங்கியதால் விமான சேவையில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் விமான சேவை இரவு வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஏர்போர்ட்டின் எக்ஸ் வலைதளத்தில், "மோசமான வானிலை காரணமாக விமானநிலையம் நாளை 09.00 மணி IST வரை வருகை மற்றும் புறப்பாடு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டுள்ளது" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com