

சென்னை,
'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக ஏரியில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.
இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 21.01 அடியாகவும், நீர்வரத்து 6,881 கன அடியாகவும் உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், உபரிநீர் திறப்பை மேலும் அதிகரிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.