அண்ணா, எம்.ஜி.ஆர். பற்றி சர்ச்சை கருத்து: சீமானுக்கு ஜெயக்குமார் கண்டனம்

சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை,
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
”தினத்தந்தி பத்திரிகையை நிறுவி அதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் தமிழை பரப்பியவர் சி.பா.ஆதித்தனார். சட்ட பேரவை தலைவராக சி.பா. ஆதித்தனார் சிறப்பாக பணியாற்றினார். அவர் அமர்ந்த நாற்காலியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா என்னை அமர வைத்தார் . இதனை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
பின்னர் அவரிடம் அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறும் போது, ”மறைந்த தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர். பற்றி விமர்சனம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி பேசுவதை அவர் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் இவரை விட கன்னா பின்னா என பேசி விட்டு சிரிப்பதற்கு எங்களுக்கும் தெரியும்.” என்றார்.






