

சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்சியின் அமைப்பு தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக ஏற்கனவே கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான பணிகளை கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 29-ல் தொடங்கப்பட்டு, உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை செய்து, உரிய கட்டண தொகையுடன் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்து ரசீது பெற்றுள்ளவர்களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகளை பெற்றுள்ள கட்சியினர் மட்டுமே நடைபெற உள்ள கட்சியின் அமைப்பு தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர் ஆவார்கள்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இந்தநிலையில், தலைமைக்கழகத்தில் இருந்து உறுப்பினர் உரிமை சீட்டுகளை பெற்று சென்றவர்களில் சிலர், உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என தெரியவருகிறது. மாவட்ட செயலாளர் உள்பட கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளில் யார் யார் எவ்வளவு கார்டுகளை பெற்று சென்றுள்ளனர் என்ற விவரம் தலைமைக்கழகத்தில் உள்ளது.
எனவே உறுப்பினர் உரிமை சீட்டுகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தலைமைக்கழகத்தில் இருந்து உறுப்பினர் உரிமை சீட்டுகளை பெற்று சென்றவர்கள், அதனை உரியவர்களிடம் வழங்கவில்லை என புகார்கள் வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு,கட்சியின் அமைப்பு தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.