‘காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம்’ - ஐகோர்ட்டு மதுரைக் கிளை கருத்து

குற்றம் வெளிப்படையாக தெரிந்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
‘காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம்’ - ஐகோர்ட்டு மதுரைக் கிளை கருத்து
Published on

மதுரை,

மதுரை தள்ளாகுளம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்திய பிறகும் கூடுதலாக வட்டி கேட்டு துன்புறுத்துவதாகவும், தனது புகார் குறித்து தல்லாகுளம் போலீசார் உரிய வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகும், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தால், அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தபிறகே விசாரணை நடத்த வேண்டும் எனவும், புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று தெரிவித்தனர்.

புகார் பெறப்பட்ட பிறகு, குற்றம் வெளிப்படையாக தெரிந்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சில வழக்குகளில் அவ்வாறு வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு விசாரணை நடத்த வேண்டும் என்றால் டி.எஸ்.பி.யிடம் அனுமதி வாங்கி, அதன் பிறகு விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com