சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமையல் எரிவாயு விலை மீண்டும் உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.1015.50 ஆக அதிகரித்திருக்கிறது.

சமையல் எரிவாயு விலை கடந்த ஓராண்டில் 10 தவணைகளில் ரூ.305 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 44 சதவீதம் உயர்வு ஆகும். இதை ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

ஒரு காலத்தில் சமையல் எரிவாயு விலை 400 ரூபாயைத் தாண்டக் கூடாது என்பதற்காக மானியத் தொகை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. 2018ம் ஆண்டு நவம்பரில் மானியத்தின் அளவு ரூ.435 என்ற உச்சத்தை தொட்டது. ஆனால், இப்போது மானியம் ரூ.24.95 ஆக குறைக்கப்பட்டு விட்டது.

இது இரட்டைத் தாக்குதலாக அமைந்து விடும். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். மானியத்தின் அளவை படிப்படியாக உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com